விரிவடையும் சென்னை
நடைபெற உள்ள 2011-ஆம் ஆண்டு தமிழக உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி மேயர்கள், நகராட்சி தலைவர்கள், பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் நேரடித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். (2006-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மேயர்கள், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் ஆகியோர் கவுன்சிலர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்) மேலும் நடப்பாண்டில் நடைபெற உள்ள தமிழக உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியுடன், அதன் புறநகரில் அமைந்துள்ள ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் உள்பட 42 உள்ளாட்சி அமைப்புகளும் இணைகின்றன.
திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த சில நகராட்சிகள், ஊராட்சிகள், பேரூராட்சிகள் சென்னை மாநகராட்சியுடன் சேர்க்கப்பட உள்ளன. இதனால் சென்னை மாநகராட்சியின் 10 மண்டலங்களுடன் கூடுதலாக 5 புதிய மண்டலங்கள் உருவாகும். எனவே சென்னை மாநகராட்சியில் உள்ள வார்டுகளின் எண்ணிக்கை 200 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கத்திவாக்கம், திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், மதுரவாயல், வளசரவாக்கம், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆலந்தூர், உள்ளகரம் - புழுதிவாக்கம் ஆகிய 9 நகராட்சிகளும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சின்ன சேக்காடு, புழல், போரூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நந்தம்பாக்கம், மீனம்பாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர் ஆகிய 8 பேரூராட்சிகளும், இடையஞ்சாவடி, சடையங்குப்பம், கடப்பாக்கம், தீயம்பாக்கம், மாத்தூர், வடபெரும்பாக்கம், சூரப்பட்டு, கதிர்வேடு, புத்தாகரம், நொளம்பூர், காரப்பாக்கம், நெற்குன்றம், ராமாபுரம், முகலிவாக்கம், மணப்பாக்கம், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், காரம்பாக்கம், ஒக்கியம், துரைப்பாக்கம், மடிப்பாக்கம், ஜல்லடம்பேட்டை, செம்மஞ்சேரி, உத்தண்டி ஆகிய 25 ஊராட்சி அமைப்புகளும் சென்னை மாநகராட்சியுடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.