பதக்கம் போச்சே...
புதுடெல்லியில் கடந்த ஆண்டு நடை பெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 56 கிலோ ஃபாண்டம் எடைப் பிரிவு ஆடவர் குத்துச்சண்டையில் இலங்கை வீரர் மஞ்சு வன்னியராய்ச்சி தங்கப்பதக்கம் வென்றிருந்தார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை 72 ஆண்டுகளில் வென்ற முதல் தங்கப்பதக்கம் இதுவாகும்.
இந்நிலையில, ஊக்க மருந்து தொடர்பான சோதனையில் மஞ்சு வன்னியராய்ச்சி தோல்வியடைந்ததால், அவர் தனது பதக்கத்தை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கோலாலம்பூரில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் நீதிமன்ற அமர்வில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மஞ்சு வன்னியராய்ச்சிக்கு மேல்முறையீடு செய்ய 21 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேல் முறையீட்டின் பேரில் நீதிமன்றத்தின் முடிவுகளை பொறுத்து, இரண்டாம் இடத்தை பெற்ற வேல்ஸ் நாட்டின் ஷான் மெக்கோல்ட்ரிக்குக்கு தங்கம் வழங்கப்படலாம்.