விலகினார் தாமஸ்?
மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் 14-வது தலைவராக கேரளாவைச் சேர்ந்த பி.ஜே.தாமஸ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ந் தேதி பதவி ஏற்றார். இவரது நியமனத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தாமஸ் கடந்த 1995-ல் கேரளாவில் உணவுத் துறை செயலாளராக இருந்தார். அப்போது மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கினார். இந்த பாமாயில் இறக்குமதியில் 2.8 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அப்போது பி.ஜே.தாமஸ் பெயரும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை இன்னமும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய ஒருவரை ஊழல் தடுப்பு ஆணையராக எப்படி நியமிக்கலாம் என்று பல்வேறு அமைப்புகள் கேள்வி எழுப்பின. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதன் மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா, நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், சுவாதாங்கர் ஆகியோர் முன்னிலையில் நடந்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. ஊழல் தடுப்பு ஆணையராக தாமஸ் பதவியில் நீடிக்கக் கூடாது என்று நீதிபதிகள் அதிரடி உத்தரவைப் பிறப்பித்தனர். இதனைத் தொடர்ந்து பி.ஜே.தாமஸ் ஊழல் தடுப்பு ஆணையர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.