தமிழ்நாட்டுக்கு வைர விருது
தமிழ்நாட்டுக்கு சி.என்.என்.-ஐ.பி.என் செய்தி நிறுவனம் விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சி.என்.என்.-ஐ.பி.என். என்னும் முன்னணி செய்தி நிறுவனம், 2008ஆம் ஆண்டு முதல் தேசிய அளவில் வளர்ச்சி, சட்டம் ஒழுங்கு, அடிப்படை கட்டமைப்பு போன்ற பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் தகுந்த நடுவர்கள் மூலம் அனைத்து மாநிலங்களையும் மதிப்பீடு செய்து, சிறந்த மாநிலங்களைத் தேர்வு செய்து, அம்மாநிலங்களுக்கு “வைர மாநில விருதுகள்” வழங்கி வருகிறது.
2010ஆம் ஆண்டிற்கு 9 பிரிவுகளின் கீழ் வைர மாநில விருதுகளும், சிறப்பு விருதுகளாக இந்திய அளவில் பெரிய மாநிலங்களில் சிறந்த மாநிலம், சிறிய மாநிலங்களில் சிறந்த மாநிலம் என்ற விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.இவற்றில், தமிழ்நாடு- இந்திய அளவில் பெரிய மாநிலங்களில் சிறந்த மாநிலம் என்ற சிறப்பு விருதினையும், குடிமக்கள் பாதுகாப்பு, குடிநீர் மற்றும் சுகாதாரம், மகளிர் மேம்பாடு ஆகிய 3 பிரிவுகளில் சிறந்த மாநிலத்திற்கான வைர மாநில விருதுகளையும் பெற்றுள்ளது.
சி.என்.என்.-ஐ.பி.என். செய்தி நிறுவனம் சார்பில் புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில், இந்த விருதுகளை குடியரசுத் துணை ஜனாதிபதி அமீத் அன்சாரி, தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் வழங்கினார். அப்போது முதலமைச்சர் கருணாநிதிக்கு தமது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவிக்குமாறு கூறினார்.