கலை- பண்பாட்டு விருதுகள்
தமிழகத்தைச் சேர்ந்த கலைஞர்களுக்கு கலைமாமணி போன்ற விருதுகள் வழங்கப்படுவதுபோல, தமிழக அரசின் கலை-பண்பாட்டுத் துறை சார்பில் இந்திய அளவில் புகழ்பெற்ற கலைஞர்களுக்கும், இலக்கியவாதிகளுக்கும் விருதுகள் வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் இயல் துறையில் சிறந்து விளங்கும் ஒருவருக்கு, “பாரதி விருது,” இசைத் துறையில் சிறந்து விளங்கும் ஒருவருக்கு, “எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது”, நாட்டியக் கலையில் சிறந்து விளங்கும் ஒருவருக்கு, “பாலசரசுவதி விருது” என மூன்று விருதுகளை ஆண்டுதோறும் வழங்கிட முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டிருந்தார்.
அதனடிப்படையில் முதல்முறையாக இந்த ஆண்டில் ‘பாரதி விருது‘ எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கும், ‘எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது‘ இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும், ‘பாலசரசுவதி விருது‘ நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியத்துக்கும் வழங்கப்பட உள்ளது. இவர்களுக்கு தலா ரூ ஒரு லட்சம் விருதுக்குரிய பொற்கிழியாக வழங்கப்படும்.